திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை அருகே உள்ள மணக்காடு பகுதியில் சுரேஷ் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் அடிதடி மற்றும் பெண்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அவரை தேடி வந்தனர்.
இந்நிலையில் அவர் மானூர் அருகே பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் அங்கு சென்று சுரேசை கைது செய்தனர். இதனையடுத்து அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைப்பதற்காக நேற்று முதல் நிலைக் காவலர் வீரமணி, பெண் காவலர் ஆஷிகா ஆகியோர் சுரேஷை ஆட்டோவில் ஏற்றி கொண்டு நீதிமன்றத்திற்கு சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ஆட்டோ நெல்லை-மதுரை நான்கு வழிச்சாலையில் உள்ள கக்கன் நகர் மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்த போது சுரேஷ் திடீரென ஆட்டோவில் இருந்து குதித்து தப்பியோடினார். இதனை பார்த்த காவலர்களும் உடனடியாக துரத்தி பிடிக்க முயன்றும் சுரேஷ் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பினார். இது குறித்து அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தாலுகா போலீசார் மற்றும் தனிப்படை அதிகாரிகள் சுரேசை தேடி வருகின்றனர்.