கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் இருந்து கர்நாடகாவிற்கு ரேஷன் அரிசி கடத்துவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் அடிப்படையில் சேலம் குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு டி.எஸ்.பி விஜயகுமார் மற்றும் கிருஷ்ணகிரி உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு சப்-இன்ஸ்பெக்டர்கள் பெரியசாமி, பெருமாள் தலைமையில் போலீசார் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் தளி ஆனேக்கல் சாலையில் உச்சினப்பள்ளி முனியப்பன் கோவில் அருகே சோதனையில் ஈடுபட்டிருந்த போது அப்பகுதி வழியாக வந்த ஆம்னி வேனை நிறுத்திசோதனை செய்தனர். அப்போது சுமார் 800 கிலோ ரேஷன் அரிசி மூட்டை மூட்டையாக இருப்பது தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து ஆம்னி வேனை ஒட்டி வந்த தளி கும்பர் தெருவை சேர்ந்த அல்லாபகாஷ் என்பவரை கைது செய்து ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை நுகர்பொருள் வாணிப கழகத்தில் ஒப்படைத்தனர்.